தமிழக சுகாதாரத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தாய் உயிரிழந்ததால் நாகராஜன் என்பவருக்கு வேலைவாய்ப்பு கருணை அடிப்படையில் வழங்கப்பட்டது. 1986-ஆம் ஆண்டில் பூந்தமல்லி பொது சுகாதார நிறுவனத்தில் ஊழியராக நியமனம் செய்யப்பட்ட இவர், அதே துறையில் ஏற்கனவே இவருடைய சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்து விட்டதாக கூறி பொது சுகாதாரத்துறை 22 ஆண்டுகளுக்கு பின் அவரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால் வழக்கு நிலுவையில் இருந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் எதிர்பாராதவிதமாக இறந்து விட்டதால் குழந்தைகள் மற்றும் மனைவி வழக்கை நடத்தினர். அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒருவரை திடீரென்று பணிநீக்கம் செய்தது அவருடைய தனிப்பட்ட வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும். எனவே பணி நீக்க உத்தரவை ரத்து செய்து உடனடியாக அவருக்கு சேர வேண்டிய பணி ஓய்வு பலனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தமிழக பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் முகமது சபிக் மற்றும் வைத்தியநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசின் உத்தரவின்படி ஒரு ஊழியரின் குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு மட்டுமே கருணை அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்க முடியும். மற்றொரு உறுப்பினருக்கு வழங்க முடியாது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் ஏற்கனவே ஒருவர் அரசு ஊழியரின் குடும்பத்தில் வேலையில் இருந்தால் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பினை மற்றொரு உறுப்பினருக்கு வழங்குவது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நாகராஜன் ஏற்கனவே அவருடைய சகோதரர் பணியாற்றி வருவதை மறைத்ததாக கூறி அவரை திடீரென பணி நீக்கம் செய்திருக்கக்கூடாது. அவருடைய வாரிசுகளுக்கு அவருக்கு சேர வேண்டிய ஓய்வுக்கான பலனை மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.