தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம்செய்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இவருக்கும், பஞ்சாப்பை சேர்ந்த திரைப் பட தயாரிப்பாளர் மற்றும் பாடகருமான பவ்நிந்தர்சிங்தத் எனும் பூவி (35) என்பவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு பழகிவந்தனர். புதுவை அருகேயுள்ள தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த பெரிய முதலியார் சாவடியில் சொகுசுவீட்டை குத்தகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கியிருந்தனர். அந்த வீட்டில் அவர்கள் துவங்கிய திரைப்பட அலுவலகப் பணியையும், ஹெர்பல் பவுடர் வியாபாரம் செய்யும் இடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் பவ்நிந்தர்சிங் தத் மற்றும் அவரது உறவினர்கள் 20 லட்சம் பண மோசடி செய்ததாகவும், இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுவதாகவும், நம்பிக்கை மோசடி செய்ததாகவும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அமலாபால் தனது உதவியாளர் விக்னேஷ் மூலம் கடந்த மாதம் 29ஆம் தேதி புகாரளித்தார். குற்றப்பிரிவு துணை போலிஸ் சூப்பிரண்டு இருதயராஜ், தாயாரிப்பாளர் பவ்நிந்தர்சிங் தத், அவரது தந்தை சுந்தர்சிங், கனடா நாட்டில் வாழும் அவரது சகோதரி உள்ளிட்ட 12 பேர் மீது மோசடி உள்ளிட்ட 16 பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் பெரிய முதலியார் சாவடியிலுள்ள இல்லத்தில் பவ்நிந்தர்சிங் தத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பவ்நிந்தர்சிங் தத்தை 13 நாள் சிறையில் அடைக்க நீதிபதி வரலட்சுமி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் பவ்நிந்தர்சிங் தத் சார்பாக ஜாமீன் கேட்டு நேற்று வானுர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பவ்நிந்தர்சிங் தத்துக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் பவ்நிந்தர்சிங் தத் உறவினர்களை கைதுசெய்ய தீவிரம்காட்டி வரும் நிலையில், பவ்நிந்தர்சிங்தத் தரப்பு வக்கீல்கள் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மீதம் உள்ளவர்களுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.