மேலவெளியூர் பாலத்தில் கார் சென்று கொண்டிருக்கும் போது பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள மேலவெளியூர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆற்றுப் பாலத்தின் இரு புறமும் தடுப்புச் சுவர் இல்லாமல் வாகனங்கள் எதிர் எதிரே வரும் போது ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் வாகனங்கள் பள்ளத்தில் தடுமாறி சாய்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பாலம் வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
இந்த விபத்தினால் காரில் இருந்தவர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். அந்த பாலத்தில் நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வதால் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி வாகன ஓட்டிகள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனையடுத்து மீண்டும் விபத்து ஏற்பட்டதால் மக்களின் நலன் கருதி தடுப்புச் சுவர் அமைக்க வேண்டி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.