மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தாயும், கைக்குழந்தையும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை பகுதியில் பூங்குழலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆறு மாத கைக்குழந்தையுடன் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சாலைக்கு மறுபுறம் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பூங்குழலி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளம் பெண்ணும், அவரது கைக்குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பூங்குழலி மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய வாலிபரையும், அவருடன் வந்த பெண்ணையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.