திமுக எம்பிக்கள் கனிமொழி, தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளது.
விழுப்புரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது குப்பையிலும் ஊழல் செய்து உள்ளதாக அப்போதைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது கனிமொழி எம்பி குற்றம் சாட்டியிருந்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்கை கடந்த ஜூன் 4-ஆம் நாள் கனிமொழியை நீர் நிறுத்த விழுப்புரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்து. நீதியரசர் நிர்மல்குமார் முன்பு நடைபெற்ற இவ்வழக்கில் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக கூறி அது தொடர்பான அரசாணையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதை பதிவு செய்துகொண்ட நீதியரசர் கனிமொழி மீதான அவதூறு வழக்கை நீக்கம் செய்து தீர்ப்பளித்துள்ளார். இதேபோல் திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளையும் சென்னை உயர் நீதிமன்றம் நீக்கம் செய்து தீர்ப்பளித்துள்ளது.