அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக ஈபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது ஓபிஎஸ் மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஈபிஎஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் அதிமுகவினுடைய பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் ஈபிஎஸ்-க்கு ஆதரவாக உள்ளதாகவும், எனவே பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு என்பது அற்பமான ஒரு செயல் என்றும், அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், கட்சி நலனை கருதியும், ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டதாகவும், கட்சியின் பொதுக்குழுவிற்கு அனைத்து அதிகாரம் உள்ளதாகவும், பொதுக்குழுவின் முடிவே இறுதியானது எனவும் ஈபிஎஸ் உடைய பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததாகவும், அதுவே பொதுக்குழுவில் பிரதிபலிக்கப்பட்டு முடிவாக எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்தை சூறையாடி விதிகளை மீறி கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளதாகவும், எனவே அவர் எந்த நிவாரணமும் கோருவதற்கு தகுதி இல்லாதவர் எனவும் ஈபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சிப் பொதுக்குழு கூடுவதற்கு முன் ஓபிஎஸ் தரப்பிற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு அனைத்து நடைமுறைகளும் பின்பற்றியே அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.