அதிமுக பொதுக்குழு கூட்டமானது வரும் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற இருக்கிறது. இதில் கலந்துகொள்ள சுமார் 2,900 உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பிறஅணிகளின் மாவட்ட செயலாளர்கள், துணை நிர்வாகிகளை சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொள்ளுமாறு பொதுக் குழுவுக்கு அழைப்பு அனுப்பப்படுவது வழக்கம் ஆகும். ஆனால் இந்த பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஆகிய தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் 150 பேர் கலந்துகொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் யார்யாரை பேச அழைப்பது?, என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொள்வது? என்பது பற்றி விரிவாக விவாதித்தனர். இம்முறை கூடும் பொதுக் குழுவில் ஆட்சியை இழந்ததற்கான காரணம் தொடர்பாக பலர் கட்டாயம் பேசுவார்கள். மேலும் சசிகலா விவகாரம் பற்றியும் கருத்து மோதல்களானது ஏற்படும். ஒற்றை தலைமை கோஷத்தை யாராவது எழுப்பினால் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாவட்ட கழக செயலாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி “மினிட்” புத்தகத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது. இப்போது அதிமுகவில் வழிகாட்டுதல் குழு இருக்கிறது. இக்குழுவுக்கு பதில் உயர்மட்டக்குழு உருவாக்கபடக்கூடும் என்று தெரிகிறது. சசிகலா ஆதரவாளர்கள் பொதுக் குழு கூட்டத்தில் நுழைவதை தடுப்பதற்கு அதிமுக, செயற்குழு உறுப்பினர்களுக்கு புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் மாவட்டசெயலாளர்கள் ஆலோசனை கூட்டம் 11 மணிமுதல் பிற்பகல் 3:30 மணிவரை சுமார் 4:30 மணி நேரம் நீடித்தது.
இந்லையில் கூட்டம் நடைபெற்ற தலைமை கழகத்திற்கு வெளியில் அதிமுகவில் ஒற்றை தலைமைக் கோரி தொண்டர்கள் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. அதிமுக அலுவலகம் முன் பன்னீர்செல்வம் , எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் போட்டிகோஷம் எழுப்பினர். அதன்பின் அலுவலகத்தின் கீழ்தளத்தில் இருந்த நிர்வாகிகள், அனைவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ஏராளமான நிர்வாகிகள் ஒற்றைதலைமையாக எடப்பாடிக்கு ஆதரவு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலாவதாக பேசிய முன்னாள் அமைச்சரான மாதவரம் மூர்த்தி, “அதிமுக வலுவாக செயல்பட ஒற்றைத் தலைமை வேண்டும்” என தெரிவித்தார். இருப்பினும் கூட்டத்தில் அடுத்தடுத்து பேச வந்த அனைவரும் ஒற்றைத் தலைமை குறித்தே பேசினார்கள். இதனால் கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அத்துடன் ஜே.சி.பி. பிரபாகர், மனோஜ் பாண்டியன், வைகை செல்வன் போன்றோர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது “ஒற்றைத் தலைமை தொடர்பாக தற்போது பேச வேண்டாம். பொதுக் குழுவை நடத்துவது பற்றி பேசுங்கள்”என்று கூறினார்.
எனினும் பெரும்பாலான அதிமுக மூத்த தலைவர்கள் ஒற்றை தலைமைதான் கட்சிக்கு நல்லது என்ற கருத்தை வெளியிட்டனர். அதிலும் குறிப்பாக அதிமுக மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், உதயகுமார் ஆகியோர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தி பேசினார்கள். பின் கூட்டத்தில் எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்களும், பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் மாறிமாறி கருத்துக்களை வெளியிட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதில் ஏராளமானவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேசியதால், பன்னீர்செல்வம் மவுனமாக பரர்த்துக்கொண்டே இருந்தார். இந்த சூழ்நிலையின் வெப்பத்தை தணிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி எழுந்து, “ஒற்றைத் தலைமை குறித்து நாங்கள் பேசி முடிவு செய்து கொள்கிறோம்” என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஆவேசம் மற்றும் சூடு குறைந்தது. பொதுக் குழுவில் பேசி முடிவு செய்து கொள்ளலாம் என தீர்மானித்தனர்.
வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை என்ற கொள்கை முடிவு எடுப்பதோடு, யார் ஒற்றைத்தலைமை என இறுதிசெய்ய வேண்டும் என கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டனர். ஒற்றைத்தலைமைக்கு வரப்போவது எடப்பாடி பழனிசாமியா..? அல்லது ஓ.பன்னீர்செல்வமா..? என்ற எதிர்பார்ப்பும் அதிமுக தொண்டர்களிடம் மட்டுமல்லாது மக்கள் மனதிலும் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது. கட்சியில் ஏற்படும் சிறுசிறு தகராறுகள் வராமல் இருக்கவேண்டும் எனில் ஒற்றைத் தலைமைதான் சிறந்தது என்ற கருத்து அதிமுகவில் 99 % பேரிடம் நிலவுகிறது. அவர்களில் 80- 90 % பேர் வரை எடப்பாடி பழனிசாமிதான் அதிமுகவுக்கு தலைமை ஏற்கவேண்டும் என விரும்புவது நேற்று நடந்த கூட்டத்தின் வாயிலாக தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. இப்போது அதிமுகவில் ஏராளமான முக்கிய நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் தலைமையையே விரும்புகிறார்கள்.
அதிமுகவில் இத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டு ஒற்றைத் தலைமை நிலைமை உருவானால் அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இவற்றிற்கு அதிமுக பொதுக் குழுவில் தீர்வு ஏற்படுமா..? என்பது 23ஆம் தேதிதான் தெரியும். மற்றொரு பக்கம் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த முயற்சி நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை மேற்கொண்ட அவருடைய ஆதரவாளர்கள் திடீரென்று பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுகவில் சண்டை வேண்டாம், சமாதானமாக போய் விடலாம் என்ற ரீதியில் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாகவே தெரிகிறது. இருந்தாலும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் எந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரியவில்லை.