அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களைக் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இங்கு போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் விக்ரமாசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு அதிபர் மாளிகை வளாகத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கொழும்புவில் உள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த போது அவற்றை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். அதனால் அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகின்றது.