கோவில் பூட்டை உடைத்து தங்க நகையை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு கோவில் பூசாரி சுந்தரம் என்பவர் பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க சென்றுள்ளார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு சுந்தரம் அதிர்ச்சியடைந்தார்.
அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது கோவில் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 2000 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.