தண்ணீரில் மூழ்கி 12- ஆம் வகுப்பு மாணவர் உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள தரப்பாக்கம் பாரதியார் நகர் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் ரிச்சர்ட்ஸ்(16) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நண்பர்களான இருவரும் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதனை அடுத்து ஏரியில் இருக்கும் சிறிய மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தபோது இருவரும் எதிர்பாராதவிதமாக ஏரிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் காப்பாற்ற முயற்சி செய்தும் அவர்களால் இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் விக்னேஷ் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் உடல்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.