உத்தரபிரதேசம் மாநிலத்தில் அனைத்து கடை உரிமையாளர்களிடமும் ஜிஎஸ்டி எண்கள் மற்றும் டெபாசிட்வரி வசூலிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவால் கடை உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஜிஎஸ்டி ஆய்வாளர்கள் 5 பேர் கொண்ட குழு பாலுகஞ்ச் சென்றனர். அங்கு டீ கடைகள் மற்றும் சாலையோர 30-40 பிரியாணி கடைகளில் ஆய்வு செய்தனர். மேலும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு கடையில் சராசரியாக தினசரி விற்கும் பணம் மற்றும் பிரியாணியின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் விற்பனையை மதிப்பீடு செய்தனர்.
அதன்பின் பிரியாணி விலை மற்றும் மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை வைத்து அதிகாரிகள் அங்கு நடைபெற்ற விற்பனையை கணக்கிட்டனர். விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பிரியாணியையும் எடை போட்டனர். அதனை தொடர்ந்து கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கபட்டது. அதுமட்டுமல்லாமல் ஜிஎஸ்டி பதிவு எண்ணையும், பில்லையும் உருவாக்கி பிரியாணியை விற்பனை செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தனர்.
ஒரு விற்பனையாளர் பொதுவாக காலை -இரவு வரை 2 தேக்சா (சட்டி) பிரியாணி விற்பார். பிரியாணியின் சில்லறை விலை கிலோவுக்கு 200 -250 ரூபாய் வரை இருக்கும். ஒரு பாத்திரத்தில் 20-25 கிலோ பிரியாணியானது இருக்கும். கடைக்காரர் 8,000 -10,000 ரூபாய் வரை எந்த வரியும் இன்றி விற்பனை செய்கிறார். இந்நிலையில் ஒவ்வொரு கடைக்காரரும் ஒவ்வொரு மாதமும் 75 -90 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார்கள் என கூறப்படுகிறது.