கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேலூர் கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோழி பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதினி(30) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வினோதினி சமையல் செய்வதற்காக நேற்று முன்தினம் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீ வேகமாக பரவியது.
இதனால் வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாமோதரன் தீயை அணைக்க முயன்ற போது அவர் மீதும் பற்றி எரிந்தது. அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.