ராமேஸ்வரத்தில் சுமார் 100 கோடி செலவில் 108 அடி உயர அனுமன் சிலை அமைப்பதற்க்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ராமர் பாதம்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கடற்கரையில் சுமார் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று ராமேஸ்வரம் ஓலைக்குடா கடற்கரை அருகே நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து சிறப்பு யாகம் நடத்திய நிலையில் வடமாநில தொழிலதிபர் ஸ்ரீநிகில் நந்தா, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில இந்திய பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோஸ்பளே, ஐ.ஏ.எஸ். அதிகாரி சவுபே ஆகியோர் செங்கல் எடுத்துவைத்து பூமி பூஜையை தொடங்கி வைத்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்தியாவில் நான்கு எல்லை பகுதிகளிலும் அனுமன் சிலை அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் ஏற்கனவே அசாம் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது ராமேஸ்வரம் கடற்கரையில் சுமார் 100 கோடி செலவில் 108 அடி உயர அனுமன் சிலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் அடுத்த இரண்டு வருடத்திற்குள் முழுமையாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராமேஸ்வரத்திற்கு வரக்கூடிய அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த பூமி பூஜையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் முரளிதரன், ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஆடலரசன், பாரதிராஜா, ராமேஸ்வரம் அப்துல் ஜாபர், என்ஜினீயர் முருகன், ஸ்ரீதர் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.