மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் சரோஜ் பாபுலால் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பேரவை வளாகத்தில் பச்சிளம் குழந்தையுடன் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய சரோஜ் பாபுலால், “கடந்த இரண்டரை வருடங்களாக கொரானா பெருந்தொற்று காரணமாக நாக்பூர் பேரவையில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறவில்லை. தற்போது நான் தாயாக இருக்கிறேன். ஆனாலும் எனக்கு வாக்களித்தவர்களின் கேள்விக்கான பதிலை பெறுவதற்காக நான் கூட்டத்திற்கு வந்திருக்கின்றேன்” என கூறியுள்ளார்.