காஷ்மீரில் 8.45 கி.மீ. சுரங்கப்பாதையை பிரதமர் மோடி வருகின்ற 24-ந்தேதி திறந்து வைக்க இருக்கிறார்.
காஷ்மீரில் தேசிய நெடுஞ்சாலை 44-ல் குவாசிகுண்ட் பகுதி முதல் பனிகால் வரை 8.45 கி.மீ. தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ரூ.2,027 கோடியில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்து திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் ஒரு நாள் பயணமாக வருன்கிற 24-ந்தேதி பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். சம்பா மாவட்டத்தின் பாலி கிராமத்தில் நடைபெறும் பஞ்சாயத்து ராஜ் தின சிறப்பு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கின்றார்.
இதில் இந்த சுரங்கப்பாதையையும் அவர் காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். இரு வழி போக்குவரத்திற்க்காக இரட்டைக்குழல் சுரங்கப்பாதையாக உருவாக்கப்பட்டிருக்கின்ற இந்த திட்டத்தால் குவாசிகுண்ட்-பனிகால் இடையேயான பயண தூரம் 16 கி.மீ. தூரம் குறையும் எனவும், பயண நேரமும் 1 மணி நேரம் குறையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சுரங்கப்பாதை மட்டுமல்லாமல் ரூ.38,082 கோடி மதிப்பிலான தொழில்துறை திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதன் மூலமாக 4 லட்சத்துக்கு மேற்பட்டோர் நேரடியாக வேலைவாய்ப்பு பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.