ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகில் உள்ள பொம்மன்பட்டி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்தார். நெசவுத்தொழில் செய்து வந்து இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி கோடீஸ்வரி அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் மகள் தேவ தர்ஷினி. இவர் கவுந்தப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2021 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதினார். ஆனால் 184 மதிப்பெண்கள் பெற்ற அவர் எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்காதால் விரக்தி அடைந்தார்.
அதன் பிறகு தாய் கோடீஸ்வரியின் அறிவுரைப்படி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோச்சிங் சென்டர் ஒன்றில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றார். அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு எழுதிய நிலையில் 518 மதிப்பெண்கள் எடுத்து அரசு பள்ளியில் படித்து 7.5% இட ஒதுக்கீடு மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அந்த மாணவி மாநில அளவில் முதலிடம் பிடித்ததால் முதன்மை கல்வி அதிகாரி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மாணவியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.