டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு டுவிட்டர் நிறுவன பங்குகளை எலான் மஸ்கிற்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதற்கிடையில் டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை டுவிட்டர் நிறுவனம் கொடுக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார். போலி கணக்குகள் குறித்து தகவல்களை டுவிட்டர் நிறுவனம் தராததாலும் ஒப்பந்தப்படி செயல்படாததாலும் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்ட டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது வழக்குத்தொடர உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.