தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கரீம்நகர் என்ற பகுதியில் சாலையோரம் குடிசை அமைத்து கூலித்தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் வழக்கம் போல் நேற்று முன்தினம் கூலி வேலைக்குச் சென்று விட்டு இரவு குடிசையில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கார் ஒன்று கூலித் தொழிலாளியின் குடிசைக்குள் புகுந்துள்ளது.
இந்த விபத்தில் நான்கு பெண்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணையில் சிறுவன் ஒருவன் கார் ஓட்டி வந்ததால் தான் இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் காரில் சிறுவனுடன் சேர்ந்து மூன்று பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் விபத்து நடந்த உடனே காரில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.